Monday, December 12, 2005

79: பெரியாழ்வார் என்று அழைப்பது ஏன்?

ஆசார்யன்: கேசவா. உனக்கு ஏதோ சந்தேகம்; கேட்கவேண்டும் என்று சொன்னாயே. என்ன சந்தேகம்?

சிஷ்யன்: அடியேன். நீங்கள் நேற்றுவரை பெரியாழ்வாரின் திவ்ய சரித்திரத்தைச் சொன்னீர்கள். அதில் தான் எனக்கு ஒரு சந்தேகம். ஆழ்வார்கள் பதின்மர் இருக்கும்போது விஷ்ணுசித்தரை மட்டும் பெரியாழ்வார் என்பது ஏன்?

ஆசார்யன்: நல்ல கேள்வி கேட்டாய் கேசவா. பெரியாழ்வார் என்று பட்டர்பிரானை அழைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஒவ்வொன்றாய் சொல்கிறேன். கவனத்துடன் கேள்.

இவர் விஷ்ணுவிடம் எப்போதும் தன் சித்தத்தை வைத்திருந்த படியாலும் விஷ்ணுவின் சித்தம் இவர் மேல் இருந்த படியாலும் இவருக்கு விஷ்ணுசித்தன் என்று பெயர்.

எல்லாருக்கும் எம்பெருமான் ரக்ஷகன். அவனே எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவன். அப்படிப்பட்ட இறைவனுக்கே தீயவர் கண்பட்டு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று பதறி அவனைக் காக்கும் பொறுப்பை தன்னில் ஏற்றுக்கொண்டதால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் எல்லாம், தன்னை அவன் காக்கவேண்டும் என்று எண்ணியிருக்க, இவர் யசோதையின் நிலையடைந்து கண்ணனை தாலாட்டி சீராட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றதால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் 'தான்' என்னும் எண்ணத்தைக் கொஞ்சமாகவேனும் கொண்டிருந்தனர்.
'வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக...சூட்டினேன் சொல்மாலை', 'அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக...ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்', 'திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்...என்னாழி வண்ணன் பால் இன்று' என்றார்கள் முதலாழ்வார்களான பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

என்றார் நம்மாழ்வாரும். இப்படி இவர்கள் 'நான்' என்ற எண்ணம் கொஞ்சமாவது கொண்டிருந்தபடியால் இவர்களை சிறந்தவராகச் சொல்லமுடியவில்லைபோலும். விஷ்ணுசித்தரோ 'பல்லாண்டு பல்லாண்டு' என்று பாடியவர். அப்படி பல்லாண்டு பாடுவது மற்ற ஆழ்வார்களுக்கு எப்போதோ ஏற்படும் உணர்வு. ஆனால் இவருக்கோ அதுவே இயற்கை. அதனால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர். அப்படியின்றி இவரோ அதே திருமேனி அழகைக் கண்டவுடன் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப்பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பல்லாண்டு பாடுவதன் பலனைக் கூறும்போது கூட

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே

என்று என்றும் பரமனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி ஏத்துவதே பல்லாண்டு பாடுவதன் பயன்; மற்றொன்றில்லை என்று திடமாய்க் கூறியவர். தன் சுகத்தை எதிர்பார்த்தாரில்லை. அதனால் இவர் பெரியாழ்வார்.

அது மட்டும் இன்றி எம்பெருமானின் கட்டளைப்படி கோதை நாச்சியார் தான் சூடிக் கொடுத்த மாலையை பெருமாளுக்குச் சமர்ப்பித்து இறைவனருள் பெற்றவர். கோதை நாச்சியாரின் தந்தையாகவும் ஆசார்யனாகவும் இருக்கும் பேறு பெற்றவர். அதனால் அழகிய மணவாளனையே மருமகனாகப் பெறும் பேறு பெற்றவர். அழகிய மணவாளனோ பெரிய பெருமாள். அவனை மருமகனாகப் பெற்ற இவரோ பெரியாழ்வார்.

Wednesday, November 30, 2005

68: விஷ்ணு சித்தர் வரலாறு - 8

அந்த மாதவன் கருணைக்கடல். பக்த வத்ஸலன். பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்யாய் நின்ற சுடர்சோதியான இறைவன் தோன்றியதால் அந்த இடம் 'மெய் காட்டும் பொட்டல்' என்ற பெயர் விளங்க நின்றது. கோடி சூரிய வெளிச்சத்துடன் தோன்றியவன் அந்த பெருஞ்சோதி தான். தன் பக்தர்களுக்கு அருள் புரிய என்றும் தயாராய் இருப்பதால் அவன் அருட்பெருஞ்சோதியும் ஆகிறான். அவனுடைய கருணையோ பெரும்கருணை. அந்த கருணை அவனுக்கு மட்டுமே உரியது. வேறு யாருக்கும் கிடையாது. அவனே அப்படிப்பட்ட கருணை உருவாய் தனிப்பெரும்கருணையாய் விளங்குபவன்.

தன் பக்தனான பட்டர்பிரானை மதுரை மன்னனும் மக்களும் கொண்டாடும் அந்த இனிய காட்சியை காண்பதற்காக கருடனின் மேல் ஏறி காட்சி தந்தான் கார்முகில் வண்ணன். கருடாழ்வாரின் சிறகிலிருந்து வீசிய காற்று தான் அங்கு நறுமணம் மிகுந்த தென்றலாய் வீசியது. அந்த ஆனந்தமயமான இறைவனைக் கண்குளிர கண்ட மதுரை மக்கள் பலவாறாக அந்த சுந்தரத்தோளுடையானை போற்றத்தொடங்கினர். தோள் கண்டார் தோளே கண்டார்; கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் என்றதற்கேற்ப இறைவனின் இணையற்ற அங்கங்களின் அழகைக் கண்டு ஒருவருக்கு ஒருவர் அன்புடன் காட்டிக்கொண்டனர். அவன் அழகையும் அடியாரை கொண்டாடியதால் தங்களுக்கு அருளப்பெற்றப் பேற்றினையும் பலவாறாக பேசித் திரிந்தனர்.

ஒரு அழகான குழந்தையை ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு தாய். அங்கு வந்த உறவினர் கூட்டம் அந்தக் குழந்தையின் அழகைக் கண்டு வாரியணைத்துப் பலவாறாக போற்றுகிறது. அந்தப் போற்றுதல் எல்லாம் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் எங்கே குழந்தைக்கு கண்ணேறு பட்டுவிடுமோ என்ற பதறுகிறாள் அந்தத் தாய்.

அது போல தனக்கருள் செய்த இறைவன் எல்லோருக்கும் காட்சி தந்ததும் அவன் காட்சியை கண்ட மக்கள் அவன் அழகைப் போற்றி புகழ்வதைக் கண்டதும் பட்டர் பிரான் மனம் எங்கே இறைவனுக்குக் கண்ணேறு பட்டு விடுமோ என்று பதறுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லவரும் இருப்பர்; கெட்டவரும் இருப்பர். எல்லார் கண்ணும் ஒன்று போல் இல்லை. எல்லாருமே அவனை இப்போது பார்க்கிறார்கள்; போற்றுகிறார்கள். நல்லவர் கண்டது போல் கெட்டவரும் காண்கிறார்கள்; அதனால் எங்கே இறைவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று அஞ்சி அதற்குப் பரிகாரமாய் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப் பாட ஆரம்பித்துவிட்டார் பட்டர் பிரான்.

இறைவன் எல்லாவிதமான மங்களங்களுக்கும் மங்களமானவன். அவனுக்கு கண்ணேறு படாது. அது மட்டும் அல்லாமல் அவன் என்றும் நிலையாய் இருப்பவன். கல்லும் தோன்றா மண்ணும் தோன்றா காலத்திற்கு முன்னரே இருந்தவன். தொடக்கமற்றவன். அநாதி. அதே போல் இங்குள்ளன யாவையும் அழிந்து போகும் காலத்திலும் அழியாமல் இருக்கப் போகிறவன். முடிவில்லாதவன். அநந்தன். அப்படிப் பட்டவனைப் போய் 'பல்லாண்டு பல்லாண்டு' என்று வாழ்த்துகிறார் என்றால் பட்டர் பிரானின் தாயன்பை என்னவென்று சொல்வது.

அவரின் இந்தப் பதட்டத்தையும் தாயன்பையும் கண்ட அச்யுதன் புன்முறுவல் பூத்து 'விஷ்ணுசித்தரே. மற்றவர் எல்லாம் தங்கள் நலனை என்னிடம் வேண்டிப் பெற்றுக்கொள்வார்கள். நீங்களோ அப்படியின்றி என் நலனை வேண்டிப் பாடுவதால் மிக உயர்ந்துவிட்டீர்கள். இன்று முதல் நீர் பெரியாழ்வார் என்று அழைக்கப்படுவீர்' என்று அருளிவிட்டு தன் பக்தனைக் கண்ட மகிழ்ச்சியுடன் பரந்தாமன் பரமபதத்திற்கு எழுந்தருளினான்.

---------------------------------------------------

இந்தப் பதிவுடன் விஷ்ணுசித்தரின் வரலாறு முடிவிற்கு வருகிறது. அடுத்தப் பதிவில் விஷ்ணுசித்தரைப் போற்றும் சில பாடல்களின் விளக்கத்தைப் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தப் பதிவிலிருந்து பெரியாழ்வார் திருமொழி பாசுரங்களைப் பார்க்கத் தொடங்கலாம்.

பெரியாழ்வார் வரலாற்றை சொல்லத் தொடங்கிய போது அது இத்தனைப் பதிவுகள் கொள்ளும் என்று நினைக்கவில்லை. பொறுமையாக படித்துக் கருத்து கூறிய அன்பர்களுக்கும் படித்து ஆனால் கருத்து கூறாத நண்பர்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வரும் பதிவுகளில் பாசுரங்களைப் படித்து தமிழமுதத்தையும் பக்திச்சுவையையும் பருகுவோம் வாருங்கள்.

Friday, November 18, 2005

57: விஷ்ணு சித்தர் வரலாறு - 7

பொற்கிழி தானே அறுந்து விஷ்ணு சித்தரின் மடியில் விழுத்ததும் மன்னன் அவையெங்கும் ஆஹாகாரம் எழுந்தது. இவ்வளவு தெளிவாக மறுமைக்காக இம்மைக்குச் செய்ய வேண்டியதை சொன்னதால் பாண்டியன் அவருக்கு 'பட்டர் பிரான்' என்ற பட்டம் கொடுத்து மிகவும் கொண்டாடினான்.

அவருக்கு மேலும் சிறப்பு செய்ய எண்ணி பட்டத்து யானையின் மேல் அவரை அமரவைத்து ஒரு அரச ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தான். தானும் பின்னால் அமர்ந்து சாமரம் வீசிக்கொண்டே சென்றான்.

ஊர்வலம் மதுரை மாநகரை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. மன்னனே சாமரம் வீசி செல்வதைக் கண்டு மக்கள் எல்லோரும் மன்னன் போற்றிக் கொண்டாடும் மகானைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் அலை மோதுகிறார்கள். அரசவையில் இருந்து அவர் சொன்ன அமுத மொழிகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றிருந்த புலவர்களும் மற்றவர்களும் அவர்களுக்கு விஷ்ணு சித்தரைப் பற்றியும் மன்னனின் சந்தேகத்திற்கு அவர் கொடுத்த எளிமையான பதிலைப் பற்றியும் விவரித்து கூறிக்கொண்டிருந்தனர்.

பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று

என்று பாடினார் ஒரு புலவர்.

மின்னார் தட மதில் சூழ் வில்லிபுத்தூர் என்றொரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

என்று பாடினார் இன்னொரு புலவர்.

இப்படியே மக்களும் அரசு அதிகாரிகளும் பண்டிதர்களும் புலவர்களும் அரசனும் விஷ்ணு சித்தரை ஊர்வலமாய் அழைத்துவரும் போது, மெய் காட்டும் பொட்டல் என்னும் இடத்திற்கு வரும் போது, திடீரென்று கோடி சூரியன் ஒரே நேரத்தில் உதித்தது போன்ற ஒளிவெள்ளம் சூழ்ந்தது. அவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் கண் கூசவில்லை. ஒரு சூரியனே கோடைகாலத்தில் எப்படி சுடுகிறான்? இங்கே அப்படி எரிச்சல் தரும் வெப்பம் இல்லை. மாறாக ஒரு மிகப்பெரிய விசிறியை வைத்து விசிறுவது போல் நன்றால் குளிர் காற்று வந்தது. இதுவரை யாருமே அனுபவித்திராத நறுமணம் கமழ்ந்தது. மக்கள் எல்லோரும் என்றுமே இல்லாத ஆனந்தத்தை அனுபவித்தனர். அப்படி அங்கு தோன்றிய காட்சியை கண்டு மீண்டும் ஆஹாகாரம் எங்கும் எழுந்து வான் வரை உயர்ந்து சூழ்ந்தது.

Tuesday, November 08, 2005

49: விஷ்ணு சித்தர் வரலாறு - 6

இறைவன் மனிதருடன் பேச நினைக்கும் போது கனவில் வருவதைத்தான் நாம் பல வரலாறுகளில் காண்கிறோம். விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றி அவரை மன்னன் அவைக்குச் சென்று பாண்டியன் சந்தேகத்தைத் தீர்க்கக் கட்டளையிட்ட பின் மாயவன் முதல் மந்திரியின் கனவிலும் தோன்றி விஷ்ணு சித்தரை அழைத்து வருவதற்காக பல்லக்கு அனுப்பும்படி கட்டளையிட்டான்.

நவீன நிர்வாகத்துறையில் ஒரு விஷயத்தில் யார் யாருக்குப் பங்கு உண்டோ அவர்கள் எல்லோருக்கும் அந்த விஷயத்தில் செய்ய வேண்டியதை ஒரு சிறந்த நிர்வாகி தெளிவாகச் சொல்லிவிடுவான் என்பர். தூயவன் மாயவனோ இந்த ப்ரபஞ்சத்தையே நிர்வாகம் செய்பவன் அல்லவா? அது மட்டும் இன்றி கீதையில் 'வேறு எந்த கவலையும் இன்றி யாரொருவன் என்னையே அடைக்கலமாக அடைந்து என்னையே வணங்கி வருகிறானோ அவனுக்குத் தேவையானவற்றை கொடுத்தும், அவனிடம் ஏற்கனவே இருப்பவற்றைக் காத்தும் நான் அவனைப் பார்த்து கொள்வேன்' என்று உறுதிமொழி கொடுத்துள்ளான் அல்லவா? அது தான் விஷ்ணு சித்தரின் பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் குறைவறச் செய்து விட்டான்.

முதல் மந்திரி அனுப்பிய பல்லக்கு ச்ரீவில்லிபுத்தூரை அடைந்தது. விஷ்ணு சித்தர் எம்பெருமானின் கருணையை மெச்சிக்கொண்டே மதுரைக்கு வந்து சேர்ந்தார். அடியாரை எந்த நிலையிலும் கைவிட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டவன் அல்லவா அந்த அச்யுதன்.

முதல் மந்திரி தான் கண்ட கனவினைப் பற்றியும், விஷ்ணு சித்தர் மதுரையை அடைந்த செய்தியையும் மன்னனுக்கு அறிவித்தார். பாண்டியனும் விஷ்ணு சித்தர் இறைவனாலேயே அனுப்பப்பட்டவர் என்பதால் அவர் சொல்லும் கருத்துகளைக் கேட்க மிக்க ஆவலுடன் அரசவைக்கு வந்தான்.

அரசவைக்கு வந்த விஷ்ணு சித்தரை தகுந்த மரியாதைகளைக் கொடுத்து ஆசனமளித்து வணங்கி நின்றான் மன்னவன். இறையடியாரும் இறைவனின் திருவடிகளை சிந்தித்து மன்னவனின் கேள்விக்குப் விடை சொல்லத் தொடங்கினார்.

மன்னனின் கேள்வி 'மறுமைக்கு வேண்டியது என்ன? அதை இம்மையில் எப்படி சேர்ப்பது' என்பது தான். அந்த கேள்வியை மனதில் நன்கு வாங்கிக் கொண்ட விஷ்ணு சித்தர் தன் விளக்கத்தைத் தொடங்கினார்.

'மன்னா. நாம் செய்யும் நல்வினைகளும் தீவினைகளும் புண்ணிய பாவங்களாய் நம்மிடமே திரும்பி வருகிறது. அதையே நாம் விதி என்கிறோம். நாம் இந்தப் பிறவியிலும் இனி மேல் வரும் பிறவிகளிலும் அடையும் இன்ப துன்பங்கள் நாம் முற்பிறவிகளிலும் இப்பிறவியில் இது வரையிலும் செய்த வினைப் பயன்களாலேயே வருகிறது. எது வரை புண்ணிய பாவங்கள் நம் கணக்கில் இருக்கிறதோ அது வரை நமக்கு பிறவி வந்து கொண்டே தான் இருக்கும். பாவங்கள் துன்பத்தைத் தரும் இரும்பால் செய்த விலங்கு என்றால், புண்ணியங்கள் பொன்னால் செய்த விலங்கு. இரண்டுமே மனிதனை பந்தப் படுத்துகிறது.

உடம்போடு உள்ள யாருமே செயல்கள் செய்யாமல் இருக்க முடியாது. அந்த செயல்கள் நற்செயல்களாய்ச் செய்தால் இப்பிறவியிலும் மறுபிறவிகளிலும் இன்பத்தை அனுபவிப்பர். ஆனால் பிறப்பிறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட முடியாது. அந்த சுழற்சியிலிருந்து விடுபட ஒரே வழி நான் செய்கிறேன் என்ற எண்ணம் இன்றி, இறையருளாலேயே இறைவனுக்காகவே எல்லா செயல்களையும் அவனே செய்து கொள்கிறான் என்று வாக்கு, உடல், மனம், புத்தி, உணர்வு எல்லாவகையிலும் அவன் அருளையே முன்னிட்டுக் கொண்டு செய்தால் அந்த நல்வினைப் பயன்களும் ஒருவனை வந்தடையாது. இதுவே ஒருவன் மறுமைக்காக இம்மையில் செய்ய வேண்டியது' என்று விஷ்ணு சித்தர் விளக்கமாய்க் கூறினார்.

இப்படி விஷ்ணு சித்தர் கூறிய விளக்கம் மிக எளிமையாய் எல்லோரும் கடைபிடிக்கும் வண்ணம் இருந்ததுடன் பாண்டியன் கேள்விக்கும் தகுந்த பதிலாய் அமைந்தது. மன்னவன் கட்டி வைத்திருந்த பொற்கிழி தானே தாழ்ந்து வந்து அடியாரின் மடியில் விழுந்தது.

----------------------------------------------------------------

ஏன் 49 என்று இந்தப் பதிவைக் குறித்துள்ளேன் என்று யாராவது கேட்குமுன் நானே சொல்லிவிடுகிறேன். இந்த வருடம் காந்தி ஜெயந்திக்கு மறு நாள் நான் வலைப் பதிய ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்து இது ஆறாவது வாரம். இந்தப் பதிவு தமிழ்மணத்தில் மலரும் 49வது மலர்.

Sunday, October 30, 2005

விஷ்ணு சித்தர் வரலாறு - 5

இந்த ப்ரபஞ்சத்திற்கோர் தனி முதல் அரசு என்பதைக் காட்டும் நீண்டு உயர்ந்த மணிமுடி; கேஸவன் என்னும் பெயருக்கேற்ப கறுத்து சுருண்ட அழகிய கூந்தல்; ஓங்காரத்தை ஒத்த காதுகள்; அதில் ஒளி வீசும் மகர குண்டலங்கள்; கருணையுடன் அடியார்களை நோக்கியதால் செவ்வரியோடிய தாமரை போன்ற கண்கள்; கூர்த்த நாசி; பவளம் போல் சிவந்து கனிந்த வாய்; அழகிய நீண்ட கழுத்து; உயர்ந்த தோள்கள்; பச்சைமாமலை போல் மேனி; கறுத்த மேகங்களின் நடுவில் வீசும் மின்னலை ஒத்து விளங்கும் தாமரையாள் அன்னை லக்ஷ்மியின் இருப்பிடம்; அவன் பாதுகாப்பில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளின் குறியீடாய் விளங்கும் கௌஸ்துப மணி; வண்ண வண்ண மலர்களால் செய்யப்பட்ட வனமாலை; அழகுக்கு அழகு சேர்க்கும் ச்ரீ வத்ஸம் என்னும் மரு; குழிந்த வயிறு; உலகெல்லாம் படைக்கும் நான்முகனைப் படைத்த பத்மநாபனின் நீரில் தோன்றும் சுழி போன்ற அழகிய தொப்புள்; நீண்ட தடக்கைகள்; அடியார்களைக் காப்பதற்கு என்றும் முன்னிற்கும் செஞ்சுடராழி; கண்ணன் வாய்ச்சுவையை என்றும் அனுபவிக்கும் பேறு பெற்ற வெண்சங்கம்; திரண்டு நீண்ட கதாயுதம்; ஞானத்தைக் குறிக்கும் அழகிய தாமரை; இடையில் சுடர் வீசும் பீதாம்பரமாம் மஞ்சள் பட்டாடை; கலீர் கலீரெனும் சிலம்பு; அடியார்களுக்கு ஒரே கதியாகும் திருவடிகள்; என்று இவ்வண்ணமாய் தோன்றினான் பரமன் விஷ்ணு சித்தரின் கனவில்.

'விஷ்ணு சித்தரே. என் பக்தனான பாண்டியன் உண்மைப் பொருளை அறிய வேண்டி ஒரு பொற்கிழி அமைத்து எல்லா அறிஞர்களையும் அழைத்துள்ளான். நீர் மதுரைக்குச் சென்று வேண்டிய வேதங்கள் ஓதி உண்மைப் பொருளைப் பற்றி தெளிவுறுத்தும்' என்று கண்ணன் கட்டளையிட்டான்.

விஷ்ணு சித்தரோ 'எம்பெருமானே. அடியேன் ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்றது இல்லை. எனக்குத் தெரிந்தது எல்லாம் பூமாலை கட்டி உன்னைத் தொழுவது மட்டும் தான். எப்படி நான் உண்மைப் பொருளை வரையறுத்துக் கூறமுடியும்?' என்றார்.

இறைவன் அதற்கு 'நீர் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். என் அடியாராகிய உமக்கு ஓதாதுணரும் தன்மையை அளித்துள்ளேன். அதனால் நீர் எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவராய் இருக்கிறீர். எல்லா சாஸ்திரங்களையும் அறிந்திருப்பது மட்டுமே மெய்ப்பொருளை அறுதியிட்டுக் கூற உதவி புரியாது. அது கர்வத்திற்கு மட்டுமே வழி வகுக்கும். உம்மைப் போல் பணிவுடன் தொண்டு செய்யும் போது தான் அந்த மறைநூல்களில் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை உணர்ந்து மற்றவர்களுக்கும் அறுதியிட்டுக் கூறமுடியும். உமக்கு அந்த தகுதி இருப்பதால் கவலையின்றி என் அருளைப் முதலாய்க் கொண்டு பாண்டியன் சபைக்குச் செல்லும்' என்றான்.

விஷ்ணு சித்தரும் மகிழ்ந்து வணங்கி நின்றார்.

Saturday, October 22, 2005

விஷ்ணு சித்தர் வரலாறு - 4

சபையில் கட்டிய அந்த பொற்கிழி அப்படியே இருந்தது. மன்னனின் சந்தேகத்தைத் தீர்த்து அந்தப் பொற்கிழியைப் பெற ஏராளமான பண்டிதர்கள் வந்தனர். தானம், தவம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஹத யோகம், மாயா வாதம், சூன்ய வாதம் என்று பலவற்றைப் பற்றி அந்த அறிஞர்கள் பேசினார்கள். அவர்கள் சொன்னதை முழுவதும் புரிந்து கொள்வதற்காக அரசனும் அவையோரும் பல கேள்விகள் கேட்டனர். படிப்பறிவு மட்டும் கொண்டு பட்டறிவு இல்லாமல் இருந்ததால் அந்த பண்டிதர்களால் எல்லா கேள்விகளுக்கும் தகுந்த பதில் சொல்ல முடியவில்லை.
எங்கே தன் சந்தேகம் தீராமலேயே போய்விடுமோ என்ற கவலை பாண்டியனுக்கு வந்துவிட்டது. தன் கேள்விக்கு தகுந்த பதில் கூறி தன்னை நல்வழியில் அழைத்துச் செல்லும் ஒரு அறிஞரை அனுப்புமாறு இறைவனை இறைஞ்சுவதே நல்லது என்று எண்ணி நகரின் தென்மேற்கில் இருக்கும் கூடல் அழகனின் ஆலயத்தை அடைந்து இறைவனை திருமாலழகனை வணங்கி நின்றான்.
கருணைக்கடலல்லவா மணிவண்ணன்? நான்மாடக் கூடலாம் மாமதுரை வாழும் அந்த அழகன் ச்ரீ வில்லிபுத்தூரில் பூமாலையும் பாமாலையும் சூட்டி திருமாலை வணங்கி வாழ்ந்து வரும் விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றினான்.

Saturday, October 15, 2005

விஷ்ணு சித்தர் வரலாறு - 3

அரண்மனை வந்து சேர்ந்த பின்பும் வல்லப தேவன் மனம் குழப்பமுற்றுத் தான் இருந்தது. பெரியவர் சொன்ன கருத்து உண்மைதான். எல்லா செல்வமும் பாண்டியனுக்கு இருந்தது. இரவுக்கும், கார்காலத்திற்கும், முதுமைக்கும் வேண்டியதெல்லாம் இருக்கிறது. ஆனால், மறுமைக்கு என்ன வேண்டும் என்பதும் அதை எப்படி இம்மையிலேயே சேர்ப்பது என்பதும் கேள்வியாக இருந்தது.

முதல் மந்திரியை அழைத்துக் கேட்டால் அவருக்கு தெரிந்திருக்கும் என்று தோன்றியது. முதல் மந்திரி செல்வ நம்பி நல்ல தெய்வ பக்தி மிக்கவர். பல கலைகள் கற்றுத் தேர்ந்தவர். மூத்த வயதினர். நூல் அறிவு மட்டும் இன்றி அனுபவ அறிவும் மிக்கவர். அவரிடம் கேட்டால் நிச்சயமாய் பதில் தெரியும் போல் தோன்றியது. அது இரவு நேரம் என்பதையும் பாராமல் முதல் மந்திரியை அழைத்து வரக் கட்டளையிட்டான்.

செல்வ நம்பி வந்து சேர்ந்தவுடன் தன் சந்தேகத்தைக் சொல்லி விளக்கம் கேட்டான். அவர் சொன்ன விளக்கம் எதுவும் பாண்டியனுக்குத் திருப்தி அளிப்பதாய் இல்லை. அதைப் பார்த்த முதல் மந்திரி, சபையில் ஒரு பொற்கிழி அமைத்து எல்லா பண்டிதர்களையும் அழைத்து இந்த கேள்வியைக் கேட்கலாம் என்று கருத்து சொன்னார். அதன் படி பொற்கிழி அமைத்து எல்லா பண்டிதர்களும் அழைக்கப் பட்டனர்.

வந்தவர்கள் ஒவ்வொருவரும் பல விதமாக மன்னனின் கேள்விக்குப் பதில் சொன்னார்கள். ஆனால் மன்னன் மனம் திருப்தி அடைய வில்லை. வந்தவர்கள் மனம் எல்லாம் மன்னன் அமைத்துள்ள பொற்கிழியை அடைவதிலேயே இருந்ததால் அவர்கள் தாம் கற்ற நூல்களில் இருந்து என்னவிதமாய் எடுத்து சொன்னாலும் அது சரியான பதிலாய் அமையவில்லை. பொருளாசை மெய்ப்பொருளை விளக்கும் திறனை அவர்களிடம் இருந்து விலக்கி விட்டது. அவர்கள் அந்த பொருளாசையால் பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் வீணராய்ப் போய்விட்டனர்.